Thursday, April 28, 2011

பலாப் பழக் கவிஞர்

" நாளை மறு நாள்என் நண்பன் ரவி
நம்மூர் வருகிறான்
நம் வீடும் வருவான்
கொஞ்சம்
சிறப்பாகச் சமையல் செய்து வை "
என்றேன் என் மனைவியிடம்

"யார் அந்த பலாப்பழக் கவிஞரா"
என்றாள் அவள்

எனக்கு குழப்பமாகிப் போனது
"அவன் கவிதை எழுதுவான்
எனவே கவிஞன் என்பது சரி
அது என்ன பலாப் பழக் கவிஞர் "
உண்மையில் புரியாமல்தான் கேட்டேன்

அவள் விளக்கத் துவங்கினாள்
"உங்களுக்கு பலாப் பழம் என்றால்
அதிகம் பிடிக்கும் எனச் சொல்லி
என் அப்பா  போனவருடம்
முழுப்பழமே கொண்டு வந்தார்
அதன் வாசம் வீடெல்லாம் விரிந்து பரவ
அதனை உடனடியாக தின்று தீர்க்க
அதிகம் ஆசைப் பட்டீர்கள்
ஆனாலும்
அதனை அறுக்கத் தெரியாது
ஒருவாரம் நீங்கள்பட்ட அவதி
ஞாபக இருக்கா"என்றாள்

எனக்குள் எரிச்சல் அதிகமாகிப் போனது
"அதற்கும்
பலாப்பழக் கவிஞர் என்பதற்கும்
என்ன சம்பந்தம்
கேள்விக்கான பதிலை மட்டும்
எப்போதும் சொல்லப் பழகு"என்றேன் நான்

அவள் நிதானமாக சொல்லத் துவங்கினாள்
"அப்படித்தான்
அவர் கவிதை பதிவாக வந்தவுடன்
ஆவலாகப் பறப்பீர்கள்
அர்த்தங்கள் சரியாகப் புரியாது
அகராதியைப் புரட்டி எடுப்பீர்கள்
அப்படியும் புரியாது போக
அவரையே தொடர்பு கொண்டு
அர்த்தம் கேட்டு ஓய்வீர்கள்
எனக்கென்னவோ நீங்கள்
பலாப்பழத்திற்கு பட்ட அவதியை
அவர் கவிதைக்கும் படுவதால்
அப்படிச் சொன்னேன் தவறா"என்றாள்

நான் உண்மையில் அதிர்ந்து போனேன்
சுவை அதிகம் என்றாலும்
அதனைப் பெறுவதற்கான
அவதியும் அதிகம் என்பதை
எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்

நான் ஆர்வமாகக் கேட்டேன்
"அப்படியானால்
நான் எந்தப் பழக் கவிஞன் " என்றேன்

"கோபித்துக்கொள்ளக்கூடாது"
பீடிகையுடன் துவங்கியவள்
"வாழைபழக் கவிஞர் :என்றாள்
சிறிது இடைவெளி கொடுத்து
"அதுவும் உரித்த வாழை ப்பழம் என்றாள்

எனக்கு உண்மையில்
பெயர்க்காரணம் புரியவில்லை
நிச்சயம் நல்ல விளக்கம் வைத்திருப்பாள்
நாளை மறு நாள்
அவசியம்  தெரிந்து கொள்ளவேண்டும்

25 comments:

வெங்கட் நாகராஜ் said...

பலாப்பழ கவிஞர் தெரிந்துவிட்டது. வாழைப்பழ கவிஞர் – அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல் உங்களைப் போலவே எங்களுக்கும். நல்ல கவிதை…

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உரித்த வாழைப்பழம் உடனே பசியாற்றும்.

அதுபோலத்தான் உங்கள் கவிதையும் ஞானப்பசியாற்றும் எனச் சொன்ன அண்ணியார் வாழ்க!வாழ்க என இந்தக் கவிஞனும் (என்ன பழம்?) வாழ்த்துகிறான்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எனக்கு புரிஞ்சிடுச்சே! வீட்டில அம்மணிக்கு கவிதை எழுத சொல்லிக் கொடுத்து அவர்களுககு ஒரு பேர் வைத்திடலாமே?

ரிஷபன் said...

உரித்த வாழைப் பழக் கவிஞர் அடடா.. உரிச்சு வச்சுட்டாங்க

Lali said...
This comment has been removed by the author.
Lali said...

புன்னகை முகமெங்கும் பரவ, யோசிக்கறேன் நான் எந்தவகை என்று :)
அண்ணியிடம் சொல்லி நண்பர்கள் அனைவரையும் வகைப்படுத்த சொல்லுங்கள்..
வேடிக்கை இல்லை.. விருப்பபட்டு சொல்கிறேன் :)
அனைத்து நண்பர்களும் கூட விரும்புவார்கள்! :)

http://karadipommai.blogspot.com/

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//நாளை மறு நாள்
அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் // தெரிந்து கொண்டு எமக்கும் தெரியப்படுத்தினால் தேவலை....

இப்படிக்கு,
செர்ரி பழ கவிஞன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்குத்தெரிந்த ஒருவர் [இப்போது அவர் உயிரோடு இல்லை]ஒரு மிகப்பெரிய பன்ருட்டிப் பலாப்பழத்தை (முழுப்பழம்)சோம்பல் இல்லாமல் அருவாமுனையில் நறுக்கி, அழகாக சுளைகள் தனியாகவும், அடசல்கள் தனியாகவும் பிரிப்பார்.

ஒரு பெரிய 10 லிட்டர் எவர்சில்வர் வாளியில் மூன்றில் ஒருபாகம் ஒஸ்தியான தேன் நிரப்பி ரெடியாக வைத்திருப்பார். சுளைகளை அந்த தேனில் ஊறப்போடுவார்.

பலாப்பழத்தோலிகள், அடசல்கள், கொட்டைகள் முதலியவற்றை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, தேனில் ஊறும் பழச்சுளைகளை மூடி பத்திரப்படுத்திவிட்டு, குளிக்கச் செல்வார்.

குளித்து முடித்து, அனுஷ்டானங்கள் ஆன பிறகு, ஒரு கரண்டியுடன் உள்ளே போய் கதவை சாத்திக்கொண்டாரானால், ஒரு மணிநேரம் கழித்து காலிபக்கெட்+கரண்டியை, பாத்திரம் தேய்ப்பவரிடம் போட்டுவிடுவார்.

அன்று முழுவதும் வேறு எதுவும் சாப்பிடாமல், யாராவது சாப்பிடக்கூப்பிட்டாலும், இன்று விரதம் என்று சொல்லிவிடுவார். ஒரு மிகப்பெரிய முழுப்பலாப்பழச்சுளைகளும், 3 லிட்டர் தேனும் உள்ளே போனால் என்ன ஆவது? நாள் பூராவும் நல்ல மயக்கத்தில் அல்லவா இருப்பார்!

6 அடிக்கு மேல் உயரம், நல்ல ஆஜானுபாகுவான உடம்பு அவருக்கு. எது சாப்பிட்டாலும் ரசித்து ருசித்து நிறைய சாப்பிடுவார். பட்டினி கிடந்தாலும் 2 நாட்கள் ஆனாலும் பசி தாங்கக்கூடியவர்.

ஏனோ தங்கள் மனைவி சொன்ன பலாப்பழக்கவிஞர் என்றதும் எனக்கு அவர் ஞாபகம் வந்து விட்டது.

இந்தத் தங்களின் படைப்பு, தேனில் ஊறிய பன்ருட்டி பலாச்சுளை போலவே நல்ல இனிப்பாக இருந்தது.
உரித்த வாழைப்பழக்கவிஞர் பற்றிய விளக்கமும் அறிந்து கொள்ளாவிட்டால் என் தலையே வெடித்துவிடும் போல ஒரு தவிப்பு ஏற்பட்டுவிட்டது.

சுவையான இந்த சம்பவங்களை பதிவிட உதவிய தங்கள் துணைவியாருக்கு என் நன்றிகள்.

உங்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

தொடருங்கள் உரித்த வாழைப்பழம் பற்றிய இதன் தொடர்ச்சியை. அன்புடன் vgk

குறையொன்றுமில்லை. said...

எளிதாக எல்லாருக்கும் புரியும்படி எழுதும்கவிஞர்
என்று சொல்கிரார்கள்.என்று நினைக்கிரேன்.

எல் கே said...

வெளிப்படையான பொருளில் எழுதுவதால் இருக்கும்..

எங்க எல்லோருக்கும் என்ன பேருன்னு அண்ணிகிட்ட கேட்டு சொல்லுங்க சார்

Avargal Unmaigal said...

வாழைப் பழ கவிஞருக்கு எனது வாழ்த்துக்கள், வாழைப்பழத்தை எளிதாக உரித்து உண்ணலாம். அது போல உங்கள் கவிதைகள் எல்லோருக்கும் படிப்பதற்கு எளிமையாகவும் அதே நேரத்தில் கருத்து செரிவூள்ளதாகவும் இருப்பதால் உங்களை வாழைபழ கவிஞர் என்று அழைத்துள்ளார்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாழைப்பழக்கவியே இந்த தூரித உலகிற்கு பொருத்தம்..

வழுக்கி விழச்செய்கிறீர்களே வார்த்தை வீச்சால்...

வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாழை முக்கனியில் ஒன்றாச்சே :-))

A.R.ராஜகோபாலன் said...

யதார்த்த நடையில்
யவ்வன தமிழில்
யாழிசை போல்
யாரையும் மயக்கும்
பலப்பல கவிவகையுடன்
பலாப்பழ கவிதை ......

உங்களின் ஆளுமை ஆட்கொள்கிறது ............ அப்படியே !

Unknown said...

சுவையான பதிவு

நெய்வேலி பாரதிக்குமார் said...

எளிமையான வரிகளில் கதை சொல்லும் உத்தியில் அழகான புதிர் கவிதை ..

FARHAN said...

வாழைப்பழ கவிஞ்சரா ??? என்னவா இருக்கும் ???

இராஜராஜேஸ்வரி said...

வாழையடி வாழையாக வாழைப்பழக் கவிஞர் வாழ வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

Since my pc is out of order I am not able to give the right comments .I will read all the postings in one go and share my thoughts shortly.

சிவகுமாரன் said...

அய்யா நான் எந்த வகைக் கவிஞர்? சீக்கிரம் சொல்லி விடுங்கள் . மண்டை வெடித்து விடும் போலிருக்கிறது. ( நான் ஈச்சம் பழத்திலிருந்து மிளகாய்ப் பழம் வரை யோசித்து விட்டேன் )

G.M Balasubramaniam said...

உங்கள கவிதையின் வீரியம் படித்தபின் இதனை எழுதுகிறேன். அதன் பின்னூட்டத்தை உங்கள் மனைவிக்கு வாசித்துக் காட்டுங்கள்.

சாகம்பரி said...

அட, பலாப்பழம் சரி, வாழைப்பழம் கூடவா . நாங்கள் எல்லாம் தோலை உரிக்கக்கூட சிரமப்படும் ரசிகர்கள் என்று ஆகிவிட்டதே. வஞ்சப்புகழ்ச்சி அணி? சில சமயம் பலாபழம் இனிப்பில்லாமல் கூட இருக்கும் VGK சாரி ரெஸிபி தேவைப்படும். வாழைப்பழம் அப்படியில்லையே.

Anonymous said...

உண்மைதான் சார். உங்கள் மனைவி சொன்னது சரியே.
சற்றே சிரமப்பட்டு தோல் உரித்து மெனக்கெட்டால் எளிதில் புரிந்து விடும்.
அது எப்படி புரியாத வார்த்தைகள்[ தமிழ்தான் ] போட்டு
கவிதை எழதுவது என்று நானும் யோசிக்கிறேன் ....யோசித்து கொண்டே இருக்கிறேன்.
எப்படியும் இந்த ஆண்டில் ஒரு பலாப்பழக் கவிதையாவது நான் எழுதி விட வேண்டும் ...
கொஞ்சம் தோல் கூட உரிக்கத் தேவைப்படாத கொய்யாப்பழ ஸ்டைல் ஐ மாற்றி.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

நான தங்கள் சில கவிதைகளைப் படித்த உடனேயே
தங்களால் முக்கனி போலவும் கவிபடைக்க முடியும் என்பதைத்
தெளிவாகப் புரிந்து கொண்டேன்
இவ்வாண்டு பதிவுலகில் மிகவும் குறிப்பிடத் தக்கவராய்
நீங்கள் இருப்பீர்கள்.இதில் எனக்கு ஐயமில்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

ரமணி சார் ,
உங்களுக்கு என் மீது இவ்ளோ நம்பிக்கையா ?
சரி , அதை நான் ஏன் கெடுப்பானேன் ?
இதை உங்கள் ஆசியாக எடுத்துக் கொள்கிறேன் .
தாக்குப் பிடிக்க முயற்சி செய்கிறேன் .
மிக்க , மனமார்ந்த , இதயப்பூர்வமான , கோடானுகோடி
நன்றிகள் !

Post a Comment