Monday, July 11, 2016

விசுத்தனமாய்....

செய்யக் கூடாத ஒன்றை
ஒருவன் செய்து விட
நடக்கக் கூடாத ஒன்று
நடந்து விட

அதைச் மிகச் சரியாய்ப்
பார்க்கத் தெரியாதவர்கள் பார்த்து

மிகச் சரியாய்ச்
சொல்லத் தெரியாமல் சொல்ல

அதை மிகச் சரியாய்க்
கேட்கத் தெரியாதவர்கள் கேட்டு

மிகச் சரியாய்
எழுதத் தெரியாதவரிடம் சொல்ல

அதை மிகச் சரியாய்ப்
புரிந்துக் கொள்ளாமல் புரிந்து

மிகச் சரியாய்
மிகத் தவறாய்  எழுதித் தொலைக்க

இப்படித்தான்
விஷத்தனமாய் பரவுகிறது
நம்மை அண்டும் விஷயமெல்லாம்

சமுத்திரமென
முதலவன் சொல்ல
அடுத்தவன்
"மு "வை நெடிலாக்கி
சமூத்திரம் எனச் சொல்ல
மூன்றாமவன்
"ச "வை முழுங்கி
மூத்திரம் எனச் சொன்ன கதையாய்

முற்றிலும்
உண்மைக்குத் தொடர்பற்றே இருக்கிறது
நமையடையும்  எல்லாமே

நம்மால் முடிந்தவரை
பார்த்ததை மட்டும் சொல்லப் பயிலுவோம்

மிகச் சரியாய்த்
தெரிந்ததை மட்டும் பகிரப் பழகுவோம்

விசுத்தனமாய் எழுத்திருப்பதால்
விளையாட்டாய்க்  கொள்ளவேண்டாம்

விஷப்புரளிப் பரவ நாமும்
ஒரு காரணமாய் இருக்க வேண்டாம்

7 comments:

ஸ்ரீராம். said...

ஊ.....ஹூம்... பழகி விட்டது.. மா(ற்)றுவது ரொம்பக் கஷ்டம்!

G.M Balasubramaniam said...

ஸ்கௌட்டில் ஒரு விளையாட்டு ஒரு செய்தி பலரிடமும் பகிரப்பட்டு மீண்டும் நம்மிடம் வரும்போது முற்றிலும் வேறு அர்த்தம் தருவதாய் வரும் காது மூக்கு வைத்துத் திருத்திச் சொல்லும் குணம் நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கிறது

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள்!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கருத்து.

த.ம. +1

வலிப்போக்கன் said...

சமுத்திரலிருந்து மூத்திரம் வந்த கதையை தெரிந்து கொண்டேன் அய்யா........

Unknown said...

அருமை. சந்தையில் தேங்காய் உடைந்தது.வெடிகுண்டு வெடித்ததாக வதந்தி பரவிய நகைச்சுவை தான்.விழிப்புணர்வு ஏர்படுத்த எழுதியமைக்கு நன்றி.

Unknown said...

அருமை. சந்தையில் தேங்காய் உடைந்தது.வெடிகுண்டு வெடித்ததாக வதந்தி பரவிய நகைச்சுவை தான்.விழிப்புணர்வு ஏர்படுத்த எழுதியமைக்கு நன்றி.

Post a Comment