Wednesday, March 1, 2017

"தெய்வத்தின் குரல் "

கடவுளின் உருவினை சக மனிதனின் உருவிலும்
அவன் குரலினை சகமனிதனின் குரலிலும்
கண்டுகொள்ளத்தெரிந்தவர்கள் எல்லாம் நிச்சயம்
பாக்கியசாலிகளே

அதற்குபெரும் ஞானம், தவம், வரம் எல்லாம்
நிச்சயம் வேண்டியதில்லை

மாறாக சக மனிதர்களிடம் அன்பும் நேசமும்
கொண்டால் போதும் என்பதுவே என்
அசைக்கமுடியாத அபிப்பிராயம்

இருபது வருடங்களுக்கு முன்னால் நான்
அரசுப்பணியில் இருந்த ஒரு மாலைப் பொழுது..

நான் எப்போதும் அலுவலகப் பணியில்
ஈடுபாடுகொண்டு பணியாற்றுவதைப் போலவே
சக ஊழியர்களிடம் மிகக் குறிப்பாக எனக்குக்
கட்டுப்பட்ட ஊழியர்களிடமும் மிக
ஈடுபாட்டுடன் நெருக்கமாகப் பழகுவேன்.
அவர்கள் அனைவரும் அவரது
சுக துக்கங்களை உடன் பிறந்தவனைப் போலவே
உரிமையுடன், ஒளிவு மறைவின்றி என்னுடன்
எப்போதும் பகிர்ந்து கொள்வார்கள்.
என்னைப் போலவே

அதை போலவே அன்றைய மாலை பொழுதில்
என் உதவியாளர் அவர் மகனுக்குப் பெண்
பார்த்து வந்த விஷயம் குறித்து என்னிடம்
பகிர்ந்து கொண்டார். அவர் இதுவரை பத்துக்கு
மேற்பட்ட இடங்களில் பெண் பார்த்து வந்தும்
எதுவும் சரியாக அமையவில்லை

காரணம் கேட்டால் ஏதாவது ஒரு குறை சொல்வார்
கடைசியாக முதல் நாள் மீண்டும் பெண்பார்க்கப்
போவதாக விடுமுறை கேட்டுப் போயிருந்தார்

அது என்ன ஆயிற்று என்று நானும் அவரும்
தனித்து இருக்கையில் கேட்க இப்படிச் சொன்னார்

"பெண் நன்றாக இருக்கிறாள். எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.செய்முறையும் எதிர்பார்த்தப்படி
எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள்
ஆனால்..."

"ஆனால் என்ன ஆனால் எல்லாம் பிடித்திருந்தால்
முடித்து விடவேண்டியதுதானே
அது என்ன திரும்பவும் ஆனால் ..."என்றேன்

"அது வந்து எல்லாம் சரியாக இருக்கிறது
ஆனால் வாடகை வீட்டில் இருக்கிறார்கள்
சொந்த வீடு இல்லாத இடத்தில் எப்படிப்
பெண் எடுப்பது...எனத்தான் யோசிக்கிறோம்"
என்றார்

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. பெண்
பார்ப்பவர்கள் இதையெல்லாம் பார்ப்பார்களா
என அதிர்ச்சியாகவும் இருந்தது

காரணம் நான் அப்போது வாடகை வீட்டில்
குடி இருந்தேன்.வீடு கட்டும் அளவு
வசதியும் வாய்ப்பும் இருந்தபோதும்
வீடுகட்டத் தோதாக இரண்டு மூன்று இடங்கள்
வாங்கிப் போட்டிருந்தாலும், குழந்தைகள்
பள்ளிப் படிப்புக்குத் தோதாக பள்ளி அருகில்
வீடு பிடித்து இருந்தேன்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
நாளை நல்ல சம்பந்தம் வாய்த்து அவர்களும்
இதைப் போல யோசிப்பவர்களாக இருந்தால்
என்ன செய்வது என்கின்ற பயம் மெல்ல
மெல்ல விஸவரூபம் எடுக்கத் துவங்கியது

மீண்டும் அதிர்ச்சியுடன்  "திரும்பச் சொல்
என்ன சொல்கிறாய்.." என்றேன்

அவரும் அசராது "சொந்த வீடு இல்லாத
இடத்தில் எப்படிப் பெண் எடுப்பது.." என்றார்

அந்த வார்த்தை ஏனோ என்னை இரண்டு நாளாக
தூங்கவிடாது இம்ஸித்துக் கொண்டே இருந்தது

அப்போதே தீர்மானம் செய்து விட்டேன்
அதுவரை நாம் நினைத்தால் எப்போது
வேண்டுமானலும் கட்டிக் கொள்ளலாமே என
என்னுள் இருந்த ஒரு அலட்சியத்தை
சட்டென ஒதுக்கி வைத்து உடன் வீடு கட்டுவது
குறித்து அதிகம் யோசிக்கத் துவங்கினேன்

உடன் ஆறு மாதத்தில் புது வீடு கட்டிமுடித்து
கிரஹப் பிரவேசமும் முடித்துவிட்டேன்

இப்போது நினைத்தால் கூட அவருடைய குரலும்
அதனால் எனக்குள் ஏற்பட்ட ஒரு உத்வேகமும்
சட சட வென எல்லா வேலைகளும்
தங்குத் தடையின்றி நடந்ததும்
பிரமிப்பூட்டும்படியாகத்தான் இருக்கிறது

இப்போதும் கூட ஒரு பாஸிட்டான விஷயத்தை
என்னுடன் பேசுபவர்கள் சொன்னால்
என்பது மட்டுமல்லாது, என்னக் கடந்துச் செல்வோர்
சொல்லிக் கொண்டு போனால் கூட,
பதிவுகளில் படித்தால் கூட
அதை மிகக் கவனாமாகக் கேட்டு அது
இறைவன் மனிதன் மூலமாக எனக்குச்
சொல்லும்செய்தியாகவே எடுத்துக் கொள்கிறேன்
அது எனக்குப் பலவகைகளில் வழிகாட்டியாக
உதவுவதாக உள்ளது

ஆம் கடவுளை மனித உருவிலும் அவனது
குறிப்புகளை மனிதனின் சொற்களிலும்
புரிந்து கொள்வதற்கு தவமோ,வரமோ, ஞானமோ
நிச்சயம் தேவையில்லை

மாறாக சக மனிதர்களிடம் அன்பும் நேசமும்
கொண்டால் போதும் என்பதுவே என்
அசைக்கமுடியாத அபிப்பிராயம்

உங்களுக்கு ..............



11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆம் .... ’தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்’ எனச் சொல்லுவார்கள்.

சிலரின் இதுபோன்ற பேச்சுக்கள் நம்மை சிந்தித்து செயல்படத் தூண்டுகோலாக அமைந்து விடுவதும் உண்டு.

இதில் பாதி விஷயங்கள் ஏற்கனவே ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் பதிவினில் படித்துள்ள ஞாபகம் உள்ளது.

சொந்த அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை ஐயா
அன்பே சிவம்

அன்பே சிவம் said...

ஆம் என்ன ஆனால் என்ன? என்றில்லாமல் என் னாலும் இயலும் என புறப் பட்டால் பெற்றிடலாம் புது வாழ்வு.

கோமதி அரசு said...

சக மனிதர்களிடம் அன்பும் நேசமும்
கொண்டால் போதும் என்பதுவே என்
அசைக்கமுடியாத அபிப்பிராயம்//

உண்மை.
பதிவு சிந்திக்க வைக்கிறது, நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு நல்லதை உணர்த்துவது அந்த சக்தி தானே.....

திண்டுக்கல் தனபாலன் said...

100% உண்மை...

balu said...

Arumai

தி.தமிழ் இளங்கோ said...

உண்மைதான் அய்யா. நானும் முக்கியமான காலகட்டங்களில், நானும் உணர்ந்து இருக்கிறேன். வெளியே சொன்னால் நம்பமாட்டார்கள் என்பதால், நான் சொல்லுவது இல்லை. நமக்குள் இருக்கும், நம்மை வழிநடத்திச் செல்லும் உள்ளுணர்வு என்றும் சொல்லலாம்.

G.M Balasubramaniam said...

ஆக தெய்வத்தின் குரல் கேட்டு வீடு கட்டினீர்கள்? வாழ்த்துகள் நானும் ஒரு வீடு கட்டினேன் என்வாழ்வில் நானே சம்பாத்தித்த முதல் கொண்டு. அதற்குநண்பர் ஒருவர் உந்துகோலாக இருந்தார்

இராய செல்லப்பா said...

நம் வீட்டிலுள்ள தெய்வத்தின் குரலை நாம் பல நேரங்களில் கேட்க மறந்துவிடுகிறோம். 'என்னங்க, அவங்க வீடு கட்டிக் குடித்தனம் போயிட்டாங்க, நாம எப்ப போறது?' என்று அந்த தெய்வம் கேட்டுக்கொண்டே இருக்குமே! அந்த தெய்வத்தின் குரல் தான் என்னை வீடு வாங்கவைத்தது. - இராய செல்லப்பா நியூஜெர்சி

Yarlpavanan said...

நெருக்கடி (ஆபத்து) வேளை
உதவும் கைகளைப் பார்த்தால்
கடவுளைக் கண்டது போல இருக்குமே!

Post a Comment